

பாட்னா,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தவகையில் பீகாரில் 21-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பிற கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் ஒரு கறுப்பு சட்டமாகும். இது அரசியல் சாசனத்தை அடித்து நொறுக்கி உள்ளது. எனவே இதை கண்டித்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் வருகிற 21-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தும். அனைத்து மதசார்பற்ற கட்சிகள், அரசியல் சாரா அமைப்புகள் மற்றும் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு இருந்தார்.
முன்னதாக இந்த போராட்டம் 22-ந்தேதி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் மாநிலத்தில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடப்பதால், ஒருநாள் முன்னதாக நடத்தப்படுகிறது.