கேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு

கொரோனா பரவலையடுத்து கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நீண்டதூர பஸ்கள் இயக்கப்படுகிறது.
கேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு
Published on

திருவனந்தபுரம்,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இன்று மற்றும் வருகிற 30-ந் தேதி அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும். முழு ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் நீண்ட தூர வழித்தடங்களில் மட்டும் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும். மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு தடை இல்லை. மற்றபடி கடைகள், வணிக நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.

திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். தியேட்டர்கள், பார்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்வார்கள்.

கேரளாவில் நேற்று 62 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 707 ஆக உயர்ந்து உள்ளது என்று அவர் கூறினார்.

இதனிடையே முழு ஊரடங்கு காரணமாக தேவை இல்லாமல் வெளியே சுற்றும் நபர்களை எச்சரிக்கும் விதமாக, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com