கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம்; தமிழக அரசு பேருந்துகள் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கம்

கேரளாவில் முழுஅடைப்பு போராட்டத்தினை அடுத்து தமிழக அரசு பேருந்துகள் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம்; தமிழக அரசு பேருந்துகள் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கம்
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.

ஆனால் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.

சபரிமலையின் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது.

இந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

இதனை தொடர்ந்து, கேரளாவில் பேருந்துகள், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று தமிழக அரசு பேருந்துகள் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com