இளம்பெண்ணை 18 மாதங்களாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் கும்பல் - குஜராத்தில் பரபரப்பு

இளம்பெண்ணை 7 பேர் 18 மாதங்களாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, கடந்த 2023-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் விஷால் சவுத்ரி என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், விஷால் சவுத்ரி ஒருநாள் இளம்பெண்ணை ஒட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்துள்ளார்.
இதன்படி அந்த பெண் விஷால் சவுத்ரியுடன் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இளம்பெண் மீது மேஜையில் இருந்த உணவுப்பொருட்கள் விழுந்துள்ளன. இதையடுத்து அவரது ஆடையை சுத்தம் செய்வதற்காக அதே ஓட்டலில் உள்ள அறைக்கு இளம்பெண்ணை விஷால் சவுத்ரி அழைத்து சென்றுள்ளார்.
அங்குள்ள குளியலறையில் இளம்பெண் ஆடைகளை கழற்றி சுத்தம் செய்தபோது, அதை விஷால் சவுத்ரி ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காட்டி இளம்பெண்ணை மிரட்டிய விஷால், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன இளம்பெண் செய்வதறியாது திகைத்தார். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி விஷால் சவுத்ரி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுமட்டுமின்றி, அதே வீடியோவை வைத்து மிரட்டி சுமார் 18 மாதங்களாக விஷால் சவுத்ரியும், அவரது நண்பர்களும் இளம்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனிடையே இளம்பெண்ணின் வீடியோ பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பரவியுள்ளது. இதனை இளம்பெண்ணின் உறவினர் ஒருவரும் பார்த்துள்ளார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும், விஷால் சவுத்ரியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பஞ்சாயத்து கூட்டம் நடத்தி பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் இளம்பெண்ணின் உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் விஷால் சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.