செனகல் நாட்டில் கைதான நிழல் உலக தாதா ரவி பூஜாரி: இந்தியா கொண்டு வரப்படுகிறார்

செனகல் நாட்டில் கைதான நிழல் உலக தாதா ரவி பூஜாரி: இந்தியா கொண்டு வரப்படுகிறார்

செனகல் நாட்டில் கைதான நிழல் உலக தாதா ரவி பூஜாரி இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறார்.
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி. இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. குறிப்பாக அரசியல் தலைவர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிப்பதை ரவி பூஜாரி தொழிலாக வைத்திருந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.கே.சுரேஷ் எம்.பி.யிடம் பணம் கேட்டு மிரட்டியதாக ரவி பூஜாரி மீது வழக்கு பதிவாகி இருக்கிறது. ரவி பூஜாரி மீது கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் அவர் வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.

இதனால் ரவி பூஜாரியை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவி நாடப்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் தேடப்படும் நபராக அவர் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள செனகல் நாட்டில் ரவி பூஜாரியை அந்த நாட்டு போலீசார் கைது செய்தனர். அப்போது, செனகல் நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்த ரவி பூஜாரி, தனது பெயரை அந்தோனி பெர்னாண்டஸ் என மாற்றி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவரை செனகலில் இருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் கர்நாடக போலீசார் இறங்கினார்கள். இந்த நிலையில், செனகல் மற்றும் இந்தியாவுக்கு இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

அதன்பிறகு, செனகலில் இருந்து ரவி பூஜாரியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வமான அனைத்து பணிகளும் நிறைவு பெற்றன.

அவரை அங்கிருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, கர்நாடக சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் பெங்களூருவில் இருந்து செனகல் நாட்டுக்கு சென்றனர். அவர்கள், ரவி பூஜாரியை அங்கிருந்து விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com