

பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
தைரியமிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதியவர்.கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக விசாரிக்க உளவுத்துறை போலீஸ் ஐ.ஜி.யான பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பி.கே.சிங் உள்பட 21 போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு விசாரணை குழுவினர் தங்களது விசாரணையை தொடங்கிவிட்டனர். கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து 3 கோணங்களில் சிறப்பு விசாரணை குழுவை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது வீட்டிற்கு சென்று ஆதாரங்களை போலீஸ் அதிகாரிகள் திரட்டினார்கள்.
காந்திபஜாரில் உள்ள கவுரி லங்கேசின் அலுவலகத்திற்கு சென்றும் சிறப்பு விசாரணை குழு போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அங்குள்ள சில ஆவணங்களையும், சமீபமாக அவரது வாரப்பத்திரிகைகளில் வெளியான செய்திகள் பற்றிய விபரங்களையும் போலீஸ் அதிகாரிகள் சேகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.
சிறப்பு விசாரணை குழு போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கவுரி லங்கேசை கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் சென்ற முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் காட்சிகள் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் கொலை நடப்பதற்கு முன்பாக ஒரு வாரம் கவுரி லங்கேஷ் யாருடன் எல்லாம் செல்போனில் பேசி இருக்கிறார், அவருக்கு வந்த அழைப்புகள் பற்றி சிறப்பு விசாரணை குழுவின் ஒரு பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுதவிர கவுரி லங்கேசை கொலை செய்ய மர்மநபர்கள் பயன்படுத்தியது நாட்டு துப்பாக்கி என்பதை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அந்த துப்பாக்கியும், எழுத்தாளர் கலபுரகியை கொலை செய்ய மர்மநபர்கள் பயன்படுத்திய துப்பாக்கியும் ஒன்று தானா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள். கவுரி லங்கேஷ் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் மட்டும், அவரை ஒரு மர்மநபர் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனாலும் அந்த காட்சிகளில் மர்மநபர் ஹெல்மெட் அணிந்திருந்ததாலும், அவரது உருவம் சரியாக தெரியவில்லை. என்றாலும், அந்த காட்சிகளின் அடிப்படையில் மர்மநபருக்கு 30 வயது இருக்கும் என்றும், அவர் 5 அடி உயரம் இருக்கலாம் என்றும் போலீஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதையடுத்து, கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபரின் உருவ படத்தை வரைவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கவுரி லங்கேசை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அம்மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி பேசுகையில், சிறப்பு விசாரணை குழுவானது விசாரணையை தொடங்கிவிட்டது, விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என மாநில அரசு நம்புகிறது, என குறிப்பிட்டார்.