

புதுடெல்லி,
தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. 37 நாள்கள் நீண்ட போராட்டத்தின் வெற்றிக்கு பின் ஹோட்டலில் கூடிய அக்கட்சி தலைவர்கள் அஷுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் போடும் ஆட்டத்தை பாருங்கள். இதுதான் ஜென்-சி கொண்டாட்டமோ.
இந்தியாவை திரும்ப பார்க்க வைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி 37 நாள் போராட்டம்: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று கல்வி மந்திரி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் டெல்லியில் முகாமிட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களின் தொடர் போராட்ட நெருக்கடி காரணமாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஒரு புதிய கட்சி, ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்து, மத்திய அமைச்சரவையையே அதிர வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மகிழ்ச்சியில், சிஜேபி கட்சியின் முக்கிய முகங்களான அஷுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பாலிவுட் பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி வெற்றியை கொண்டாடியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், "இதுதான் ஜென்-சி தலைமுறையின் மாஸ் கொண்டாட்டமோ" என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து மார்தட்டி வருகின்றனர். எழும் விமர்சனங்களும், இந்த நட்சத்திர ஹோட்டல் கொண்டாட்ட வீடியோவை சுட்டிக்காட்டி, ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி உள்ளிட்ட விமர்சகர்கள் சிஜேபி கட்சியின் நிதி ஆதாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விமர்சனங்களுக்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ள சிஜேபி செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ், "முந்தைய தலைமுறையினர் நினைப்பது போலத்தான் போராட்டம் இருக்க வேண்டும் என்பதில்லை. எங்களால் சாலையில் அமர்ந்தும் போராட முடியும், கோல்ட் காபி குடித்துக்கொண்டே திட்டமிடவும் முடியும், நடனமாடிக்கொண்டே வெற்றியை கொண்டாடவும் முடியும். 'அங்கிள், ஆண்ட்டிகள்' தொடர்ந்து குறை கூறிக்கொண்டே இருக்கட்டும், அவர்கள் எங்களை சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும்" என ஜென்-சி பாணியில் ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளார்.