தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றம்: அரசு டாக்டர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றம்: அரசு டாக்டர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
Published on

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பல்லசனா பகுதியை சேர்ந்தவள் வினோதினி (வயது 9). இவள் தனது சகோதரனுடன் விளையாடி கொண்டிருந்த போது வலது கையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே சிறுமியை பெற்றோர் சித்தூர் தாலுகா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டாள்.

அங்கு சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் கையில் டாக்டர்கள் பிளாஸ்டர் போட்டு உள்ளனர். அதன் பிறகு சிறுமி வலது கையில் வலி தாங்க முடியாமல் துடித்தாள். மேலும் வலது கையில் ரத்த ஓட்டம் குறைந்து இருந்ததோடு, கருப்பாக இருந்தது. அதோடு அந்த கையில் வீக்கம் ஏற்பட்டதோடு, நீர் கட்டி இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து சிறுமி கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் சிறுமியின் வலது கையை (முழங்கை வரை) வெட்டி அகற்றினர். பாலக்காடு அரசு மருத்துவமனையில் டாக்டர்களின் தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றப்பட்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, மாவட்ட மருத்துவ அலுவலர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில், பாலக்காடு அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்தில், டாக்டர்கள் முஸ்தபா, சர்பராஸ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com