

கோவா
கோவாவில் சுதந்திர தின விழாவின்போது மயங்கி விழுந்த டி.ஜி.பி. குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கோவா மாநில தலைநகர் பனாஜியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சவந்த் கலந்து கொண்டார். அவர் மேடையில் விருதுகள் வழங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது மேடையில், மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் குமாரும் இருந்தார். அவர் திடீரென அசவுகரியமாக உணர்ந்தார். மேடையை விட்டு இறங்கிச்சென்று தண்ணீர் குடித்தார். அடுத்த வினாடி, அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் மணிபால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். உடலில் நீர்ச்சத்து குறைவால் அவர் மயங்கி விழுந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். சிகிச்சையளித்த பின்னர், உடல்நிலை சீரானது என கோவா காவல் துறை தெரிவித்தது.
இதனை தொடர்ந்து அவர் குணமடைந்ததும், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதன்பின்னர் அவர் வீடு திரும்பினார். அவர் தற்போது உடல்நலத்துடனும் மற்றும் நல்ல முறையில் இருக்கிறார் என கோவா போலீசார் கூறினர்.