

ஜம்மு காஷ்மீர்,
ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ராயல் பார்க் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா சென்றிருந்தார். விழாவில் கலந்துகொண்டு திரும்பும்போது அவருக்குச் சில அடிகள் பின்னால் நின்றிருந்த நபர், திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து அப்துல்லாவின் தோள்பட்டைக்கு நேராகக் குறிவைத்துச் சுட்டார். அப்போது அங்கிருந்த தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள் உடனடியாகச் செயல்பட்டு தாக்குதல்காரரைத் தள்ளிவிட்டனர். இதில் குண்டு இலக்கைத் தவறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் இருந்து 'கடவுள் தன்னைக் காப்பாற்றியதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”எனது கழுத்துக்கு பின்னால் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றார். கடைசி நிமிடத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். உடனடியாக நான் பாதுகாப்பாக அங்கிருந்து புறப்பட்டேன். நான் தற்போது நலமுடன் இருக்கிறேன். கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார்.” இவ்வாறு அவர் கூறினார். எனினும், பாதுகாப்பு குறைபாடு குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.