

பெங்களூரு,
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அந்த பயணி கடத்தி வந்த தங்கத்தை இனிமா கொடுத்து உடலில் இருந்து அதிகாரிகள் வெளியே எடுத்தனர். இதன்பின்னர் அந்த பயணி கடத்திய 482.26 கிராம் எடையுள்ள ரூ.23.80 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். தங்கம் கடத்தி வந்த பயணியும் கைது செய்யப்பட்டார். அந்த பயணியின் பெயர், விவரங்கள் வெளியிடப்படவில்லை.