

மத்திய பிரதேச மாநிலத்தில் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மறுபுறம் தேர்தல் ஆணையம், விசாரணை முகமைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த கும்பலை போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 31.50 லட்சம் போலி ரூபாய் நோட்டுக்களை போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. கைப்பற்றப்பட்டது 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களாகும்.
கைதுசெய்யப்பட்ட அப்தாப் அலி (வயது 42) தலைமையிலான கும்பலிடம் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தேவையான பொருட்களை அவர்கள் எங்கு வாங்கினார்கள் என்பது தொடர்பாக விசாரணை தொடர்கிறது என்று கூறியுள்ள போலீஸ், அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் அனைத்தும் ஒரே எண்ணையை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அப்தாப் ஏற்கனவே போலி ரூபாய் நோட்டு கும்பல்களுடன் தொடர்பை கொண்டவர். விசாரணையின் போது, ரூ. 3 கோடிக்கு போலி ரூபாய் நோட்டுக்களை தேர்தலுக்கு முன்னதாக அச்சடித்து கொடுக்கும்படி ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் யார் ஆர்டர் கொடுத்தது என்பதை அவர் தெரிவிக்கவில்லை என போலீஸ் கூறியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக ரூபாய் நோட்டுகளை கொடுக்குப்படும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் தேர்தலில் பயன்படுத்த அச்சடிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை; விசாரணை தொடர்கிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.