குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள்: அருணாச்சல முதல்-மந்திரியை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கடந்த 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அவர் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள்: அருணாச்சல முதல்-மந்திரியை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க வை சேர்ந்த முதல்-மந்திரி பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அவர் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் 1,270 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் முறையான டெண்டர் நடைமுறைகளை பின்பற்றாமல் முதல்-மந்திரியின் மனைவி, தாய் மற்றும் உறவினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பெமா காண்டுவின் தாயார் ரின்சின், உறவினர் ஷெரிங் டாஷி ஆகியோருக்கு சொந்தமான பிராண்ட் ஈகிள்ஸ், அலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்படாமல் பொதுப் பணித்துறை ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளன. மொத்தமாக 1,270 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தங்களால் முதல்-மந்திரியின் குடும்பத்தினர் பயன் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவினை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் நீதிபதி அஞ்ஜாரியா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது நடந்த விசாரணையின்போது, “அரசு ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும். முதல்-மந்திரி பெமா காண்டுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். தேவையெனில் அதற்கு முந்தைய ஆண்டுகளை கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம். சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை நிலை அறிக்கையை 16 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதில், முழுமையான குற்றவியல் விசாரணை தேவையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விசாரணைக்கு மாநில அரசும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com