

குவாலியர்,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 4 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இதனால் விவசாயிகளின் போராட்டம் ஓய்வதற்கான காலம் கனியாமல், இந்த பிரச்சினையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. ஆனால் விவசாயிகள் நினைத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
அசாமில் தேர்தல் பிரசாரத்தை முடித்து திரும்பிய அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறுகையில், இந்த சிக்கலை தீர்க்க வேண்டும் என விவசாய பிரதிநிதிகள் முடிவு செய்யும் நாளில் அவர்களது போராட்டம் முடிவுக்கு வரும். அப்போது அரசும் ஒரு வழியை கண்டுபிடிக்கும். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பிரச்சினைக்கு தீர்வு காணவும் அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.