இந்திய பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஒருபோதும் தயங்காது: ராஜ்நாத் சிங் பேச்சு

ஆயுதங்களால் மட்டுமே போர்கள் வெற்றி கொள்ளப்படுவதில்லை என ராஜ்நாத் சிங் பேசும்போது குறிப்பிட்டார்.
இந்திய பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஒருபோதும் தயங்காது: ராஜ்நாத் சிங் பேச்சு
Published on

கச்,

நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, குஜராத்தின் கச் நகரில் பூஜ் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் இன்று கொண்டாட்டங்கள் நடந்தன. இதில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின்னர் அவர்களிடையே பேசும்போது அவர், பூஜ் மற்றும் கச் பகுதிகளின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார்.

இது புவியியல் அமைப்பு என்பது மட்டுமில்லாமல், உணர்வுப்பூர்வத்துடனான பூமி மற்றும் தைரியத்திற்கான பல தொடர் நிகழ்வுகளை கொண்டது. 1971-ம் ஆண்டு போரோ அல்லது 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரோ நம்முடைய வீரர்களின் துணிச்சலை இந்த கச் நகரின் எல்லைகள் கண்டன என்றார்.

இந்த இரு பகுதிகளும் பல நூற்றாண்டுகளாக இயற்கையின் சீற்றம் மற்றும் எதிரிகளின் படையெடுப்பு ஆகிய சவால்களை எதிர்கொண்டது என்றார். போர்கள், ஆயுதங்களால் மட்டுமே வெற்றி கொள்ளப்படுவதில்லை என கூறிய அவர், நல்லொழுக்கம், கண்ணியம் மற்றும் தொடர்ச்சியாக அதற்காக தயாராதல் ஆகியவற்றால் போர்கள் வெல்லப்படுகின்றன என்றார்.

அதனால், புதிய தொழில் நுட்பங்களை கற்று கொள்வதுடன், தினசரி பயிற்சியை மேற்கொள்ளும் வழக்கம் கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உங்களுடைய நலன், பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் என்னென்ன உள்ளனவோ, அவற்றை எடுக்க அரசு ஒருபோதும் தயங்காது என்றும் உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்று அப்போது கூறினார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர், ராணுவ வீரர்கள் நடத்திய இரவு விருந்திலும் கலந்து கொண்டு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உணவு சாப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com