

ஐதராபாத்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் கடந்த அக்டோபர் 5-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 52 நாட்கள் நடந்த இந்த வேலை நிறுத்தம் கடந்த மாத இறுதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்த வேலை நிறுத்தத்தின்போது, போராட்டத்துக்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் மனமுடைந்து பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதைப்போல போராட்டத்தின்போது மாரடைப்பு உள்ளிட்ட சம்பவங்களாலும் சிலர் உயிரிழந்தனர்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், போராட்டத்தின் போது உயிரிழந்த 38 ஊழியர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் அளித்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இதில் 33 ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான நியமன ஆணையை போக்குவரத்துக்கழக இடைக்கால நிர்வாக இயக்குனர் சுனில் சர்மா வழங்கினார்.