கேரள சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை புறக்கணிப்பு; காங்கிரஸ் கூட்டணி வெளிநடப்பு

கேரள சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையை புறக்கணித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெளிநடப்பு செய்துள்ளது.
கேரள சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை புறக்கணிப்பு; காங்கிரஸ் கூட்டணி வெளிநடப்பு
Published on

திருவனந்தபுரம்,

14வது கேரள சட்டசபையின் 22வது கூட்டம் கவர்னர் ஆரிப் முகம்மது கான் உரையுடன் இன்று காலை தொடங்கியது. கொரோனா கட்டுப்பாட்டு உத்தரவுகளை பின்பற்றி கூட்டம் நடைபெறுகிறது. கவர்னரின் உரைக்கு பின், இன்றைய கூட்டத்தில் , மரணம் அடைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சங்கனாச்சேரி சி.எப். தாமஸ் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தொடர்ந்து 11ந்தேதி வரை சபை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். பின்னர் 12ந்தேதி முதல் 14ந்தேதி வரை 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். 15ந்தேதி கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக், 2021 - 2022-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை (பட்ஜெட்) தாக்கல் செய்வார். பட்ஜெட் மீதான பொது விவாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க கோரும் தீர்மான அறிவிப்பின் பேரில் அரசியலமைப்பின் விதிகள் மற்றும் சட்டமன்றத்தின் விதிகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரவு செலவு திட்டத்தின் இறுதி துணை கோரிக்கை மீதான ஓட்டெடுப்பு 21ந்தேதி நடைபெறும். இந்த கூட்டம் வருகிற 28ந்தேதி நிறைவு பெறும்.

இந்நிலையில், கேரள சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையை புறக்கணித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெளிநடப்பு செய்துள்ளது. கேரள சட்டசபைக்கு வெளியே, முதல் மந்திரி பினராயி விஜயன் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com