டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு

டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 2 நாட்கள் கவர்னர்கள் மாநாடு நடக்கிறது.
டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு
Published on

புதுடெல்லி,

மாநில கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளுக்கு பிந்தைய 2வது அமர்வில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உரையாற்றுகின்றனர். அவர்களை தொடர்ந்து பிரதமர் மோடி சிறப்புரை நிகழ்த்துகிறார்.

3வது அமர்வில் மாநில பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பொருட்களில் விவாதங்கள் நடக்கிறது. 4வது அமர்வில் ராஜ்யபால் அறிக்கை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கவர்னர்கள் விவாதிக்கின்றனர்.

மாநாட்டின் 5வது அமர்வில் (5ந்தேதி) மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்த விவாதமும், 6வது மற்றும் இறுதி அமர்வில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவர்னர்கள் அறிக்கை வழங்கலும் இடம்பெறுகிறது. இந்த அமர்வில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை, வெளியுறவுத்துறை மந்திரிகளும் உரையாற்றுகின்றனர்.

இதைப்போல துணைநிலை கவர்னர்களுக்கு என சிறப்பு அமர்வு ஒன்றும் 5ந்தேதி தனியாக நடத்தப்படுகிறது. இதில் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்களின் நிலவரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் மந்திரிசபை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்களுடன், மத்திய மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com