

புதுடெல்லி,
தற்போது கார்களில் டிரைவர், அவர் அருகே அமர்ந்து பயணிப்பவர், பின் இருக்கையில் இரு முனைகளிலும் பயணிப்பவர்கள் 2 பேர் என சீட் பெல்ட் வசதி உள்ளது.
இனிமேல் பின் இருக்கையில் மத்தியில் உள்ளவர்களும் சீட் பெல்ட் அணிவதற்கு வசதியாக சீட் பெல்ட் கட்டாயம் ஆக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல, தற்போது பெரும்பாலான கார்களில் 2 பாயிண்ட் சீட் பெல்ட் பயன்படுத்தப்படுகிறது. இனி விமானத்தில் பயன்படுத்துவதுபோன்று ஆங்கில எழுத்தான ஒய் வடிவ சீட் பெல்ட்தான் அனைத்து இருக்கைகளிலும் பொருத்த வேண்டும் என்பது கட்டாயம் ஆகிறது. இதனால் கார்ப்பயணம் பாதுகாப்பானதாக ஆகி விடும்.
3 பாயிண்ட் சீட் பெல்ட், 2 பாயிண்ட் சீட் பெல்ட்டை விட பாதுகாப்பானது. ஏனென்றால் இதை அணிகிறபோது உடலை முழுமையாக அசையாமல் பெல்ட் பிடித்துக்கொள்ளும். தோளையும் இறுக்கி பிடித்துக்கொள்ளும். இதனால் விபத்து ஏற்பட்டாலும் படுகாயம் தவிர்க்கப்படும். பயணி தூக்கி வீசப்பட மாட்டார்.
அந்த 3 பாயிண்ட் பெல்ட் வசதியை காரில் ஏற்படுத்துவதை கட்டாயம் ஆக்கும் அறிவிப்பை மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் வெளியிட்டார்.
இதுபற்றி அவர் கூறுகையில், காரில் முன்பக்கம் பார்த்து பயணிக்கிற அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகளை வாகன உற்பத்தியாளர்கள் வழங்குவதை கட்டாயம் ஆக்கும் கோப்பில் கையெழுத்து போட்டுள்ளேன் என குறிப்பிட்டார். இந்த புதிய விதி எப்போது அமலுக்கு வரும் என்பதை மந்திரி நிதின் கட்காரி குறிப்பிடவில்லை.