காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் மூதாட்டியை 8 கி.மீ. தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த ராணுவ வீரர்கள்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் 74 வயது மூதாட்டியை இந்திய ராணுவ வீரர்கள் 8 கி.மீ. தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் மூதாட்டியை 8 கி.மீ. தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த ராணுவ வீரர்கள்
Published on

பந்திபோரா,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் மைனஸ் டிகிரியில் குளிர் வாட்டி வருகிறது. காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தின் புத்து என்ற கிராமத்தில் குலாம் ரேஷி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

74 வயதுடைய அவருக்கு அதிக குளிரால் உடல் நடுங்கியதுடன், தீவிர காய்ச்சல் மற்றும் வயிற்று வலியாலும் அவதிப்பட்டுள்ளார். இவரது வீட்டில் இருந்து மருத்துவமனை 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் பந்திப்போராவின் புத்து ராணுவ முகாமை தொடர்புகொண்ட குலாம் தனது மனைவியின் நிலை பற்றி பதற்றத்துடன் விளக்கியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் கூறியுள்ளார்.

இதனால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள், குலாமின் மனைவியை அப்பொழுது தயாரிக்கப்பட்ட ஸ்டிரெச்சர் ஒன்றில் வைத்து, கடும் பனிப்பொழிவுக்கு இடையே அவரை தோளில் சுமந்தபடி கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தூரம் வரை நடந்தே சென்றுள்ளனர்.

அவர்கள் சாலையை அடைந்ததும், அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். சரியான தருணத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, மனிததன்மையுடன் நடந்து கொண்ட ராணுவ வீரர்களை அந்த பகுதி வாழ்மக்கள் பாராட்டியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com