

சண்டிகர்,
பஞ்சாப்பில் போலீஸ் நிலையம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்டம் ஜலாலாபாத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்திற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் வந்த மர்ம நபர்கள் போலீஸ் நிலையம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 வாகனங்கள் சேதமடைந்தன. தாக்குதலில் போலீசார் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
அதேவேளை, இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த போலீசார் , தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர், தீவிர தேடுதலுக்குப்பின் போலீஸ் நிலையம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரின் பெயர் உள்ளிட்ட எந்த விவரத்தையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை. மேலும், இந்த குண்டு வீச்சு தாக்குதலுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, போலீஸ் நிலையம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.