“முதல் தகவல் அறிக்கையில் கிரேட்டா தன்பெர்க் பெயர் இடம்பெறவில்லை” - டெல்லி காவல்துறை தகவல்

டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கிரேட்டா தன்பெர்க் பெயர் இடம்பெறவில்லை என காவல்துறை சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
“முதல் தகவல் அறிக்கையில் கிரேட்டா தன்பெர்க் பெயர் இடம்பெறவில்லை” - டெல்லி காவல்துறை தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை.

இதற்கிடையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டனர். அமெரிக்க பாடகி ரிஹானா, விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியை பகிர்ந்து, இதைப் பற்றி ஏன் நாம் பேசுவதில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்று பதிவிட்டார். இவர்களின் டுவிட்டர் பதிவுகள் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து பல்வேறு உலக பிரபலங்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான வழிமுறைகள் கொண்ட ஒரு தொகுப்பை கிரேட்டா தன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் பிரிவினையை தூண்டும் வகையிலான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பதிவை கிரேட்டா சிறிது நேரத்தில் நீக்கினார்.

இதனை தொடர்ந்து கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன், முதல் தகவல் அறிக்கையில் யார் பெயரும் இடம் பெறவில்லை என்றும், கிரேட்டாவால் பகிரப்பட்ட சர்ச்சைக்குறிய வழிகாட்டுதல் தொகுப்பை உருவாக்கியவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com