

லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் திருமண விழா ஒன்றில், மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் ஆடல் பாடலுடன் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மாப்பிள்ளையின் தம்பி மணமகளின் சேலையின் நுனிப்பகுதியை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மணப்பெண், அந்த நபரை கண்டித்ததோடு, இது குறித்து தனது தாய் மாமாவிடம் கூறியுள்ளார். அவர் உடனடியாக மாப்பிள்ளையின் குடும்பத்தினரிடம் இது குறித்து வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது.
அங்கு பலரும் மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், திருமண வீட்டில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இந்த சண்டையில் மாப்பிள்ளையின் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், மணப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அதிரடியாக கூறினார்.
இதையடுத்து இருதரப்பினரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேசினர். இறுதியில் இரு குடும்பத்தினரும் சமாதானம் அடைந்த நிலையில், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை, நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் நடந்து முடிந்தது. திருமண வீட்டில் நடந்த இந்த கலாட்டா சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.