அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாக உயர்வு
Published on

புதுடெல்லி,

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. (சரக்கு சேவை வரி) வசூல் விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 127 கோடி வசூலாகி உள்ளது. தொடர்ந்து 4-வது தடவையாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி வசூலாகி இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாத வசூல் 24 சதவீதம் அதிகம்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடிதான் மிக அதிகபட்ச வருவாயாக இருந்தது. அதற்கு அடுத்து 2-வது அதிகபட்ச வசூல், கடந்த மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியே ஆகும்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டு வருவதையே இந்த ஜி.எஸ்.டி. வசூல் காட்டுகிறது. பண்டிகை கால தேவைகள் அதிகரித்து இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

வரி ஏய்ப்புகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளாலும் வசூல் அதிகரித்துள்ளது. செமிகண்டக்டர்கள் வரத்து பாதிக்கப்பட்டதால், கார்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டது. இல்லாவிட்டால், ஜி.எஸ்.டி. வசூல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

இவ்வாறு நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com