குஜராத்: பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி - 3 பேர் பலியான சோகம்

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பீரா பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத்: பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி - 3 பேர் பலியான சோகம்
Published on

ஆனந்த்,

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் இன்று காலை கம்பீரா பாலம் இடிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பல வாகனங்கள் மாஹிசாகர் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பத்ரா காவல் ஆய்வாளர் விஜய் சரண் செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மாஹிசாகர் ஆற்றின் மேல் அமைந்துள்ள காம்பீரா பாலம் இன்று காலை 7.30 மணியளவில் இடிந்து விழுந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "மாஹி ஆற்றில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுமார் நான்கு வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இரண்டு லாரிகள் மற்றும் இரண்டு வேன்கள் உட்பட வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இதுவரை நான்கு பேரை மீட்டுள்ளோம்" என்று கூறினார்.

இடிந்து விழுந்த உடனேயே, உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவசர சேவைகளுக்கு தகவல் அளித்தனர்.  இதனைத்தொடர்ந்து போலீசாரும், பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகளை தொடங்கினர்.

முறையான பராமரிப்பு இல்லாததே இந்த பால விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com