குஜராத்: தானிய ஏற்றுமதி ஓராண்டில் 2.47 லட்சம் டன்களாக உயர்வு

குஜராத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில், 2 லட்சத்து 47 ஆயிரத்து 789 டன் அளவிலான தானியங்கள் ஏற்றுமதியாகி உள்ளன.
குஜராத்: தானிய ஏற்றுமதி ஓராண்டில் 2.47 லட்சம் டன்களாக உயர்வு
Published on

காந்திநகர்,

உலக தானியங்கள் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. தானியங்களை பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் தானியங்களின் மிக பெரிய உற்பத்தியாளராகவும் மற்றும் நுகர்வோராகவும் இந்தியா திகழ்கிறது.

துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட முக்கிய வகைகளில் நாடு தன்னிறைவை அடைந்துள்ளது. இந்த சூழலில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி கழகம் (ஏ.பி.இ.டி.ஏ.) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில், குஜராத்தில் இருந்து, 2 லட்சத்து 47 ஆயிரத்து 789 டன் அளவிலான தானியங்கள் ஏற்றுமதியாகி உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டு மடங்காகும். டாலர் மதிப்பு சாதகம் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்றுமதியாளர்கள் பெரும் பலன் அடைந்துள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த அத்தியாவசிய துறையில், தேசம் சுயசார்பில் மேம்படுவதற்கு முக்கிய பங்காற்றும் மற்றும் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக, முதல்-மந்திரி புபேந்திர பட்டேல் தலைமையிலான குஜராத் உருவெடுத்து உள்ளது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

துவரை மற்றும் கொண்டை கடலை உற்பத்தியில் நாட்டில் குஜராத் முன்னிலை வகிக்கிறது. பச்சை பயறு மற்றும் உளுந்து உற்பத்தியில் நாட்டில் 5-வது இடம் வகிக்கிறது. சீரான குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பால், விவசாயிகளின் வருவாயும் ஊக்குவிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. இதனால் அவர்களில் பலர், நவீன வேளாண் நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com