குஜராத்துக்கு அடுத்து மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்.இ. வகை கொரோனா பாதிப்பு உறுதி

குஜராத்துக்கு அடுத்து மும்பையில் இன்று மற்றொரு நபருக்கு எக்ஸ்.இ. வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
குஜராத்துக்கு அடுத்து மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்.இ. வகை கொரோனா பாதிப்பு உறுதி
Published on

மும்பை,

சீனாவின் உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து உலக நாடுகளுக்கு இன்னும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு உலக அளவில் வேகமாக பரவி மிரட்டிய நிலையில், ஒமைக்ரான் வகையில் மரபணு மாற்றம் அடைந்த எக்ஸ்.இ. வகை கொரோனா இங்கிலாந்தில் கண்டறியப்பட்டு இருந்தது.

இந்த எக்ஸ்.இ. வகை கொரோனா, ஒமைக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் ஒருவருக்கு இந்த வகை கொரோனா பரவி உள்ளது என தகவல் வெளியானது.

இந்த வார துவக்கத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மும்பை நபர் ஒருவருக்கு எக்ஸ்.இ. வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது என செய்திகள் வெளியாகின. எனினும், இதனை நிராகரித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை கொண்டு புதிய வகை கொரோனா பாதிப்புதான் இது என வரையறுக்க முடியாது என கூறியிருந்தது.

இந்த நிலையில், குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ்.இ. வகை கொரோனாவும், மற்றொருவருக்கு எக்ஸ்.எம். வகை கொரோனா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர் என என்.டி.டிவி தொலைக்காட்சி தெரிவித்தது. எனினும், இதுபற்றிய கூடுதல் தரவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. புதியவகை கொரோனா பாதித்த இருவரின் உடல் நிலை குறித்தும் அதிகாரிகள் எந்த தகவலையும் அளிக்கவில்லை.

இந்த சூழலில், மும்பையில் மற்றொரு நபருக்கு எக்ஸ்.இ. வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டு உள்ளது. குஜராத்தில் 67 வயதுடைய முதியவருக்கு இந்த வகை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக மற்றொருவருக்கு இந்த பாதிப்பு அறியப்பட்டு உள்ளது.

ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் இணைவால் இந்த எக்ஸ்.இ. வகை கொரோனா உருப்பெற்று உள்ளது. மற்ற வகைகளை விட அதிக பரவல் திறன் கொண்டது. எனினும், இதுபோன்று அடிக்கடி மரபணு அமைப்பில் மாற்றம் ஏற்படுவது வைரசுகளின் இயற்கை வாழ்வின் ஒரு பகுதி என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

அதனால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் ஆனால், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com