

ஆமதாபாத்
தடுப்பூசி போடப்படாதவர்கள் இன்று 20 முதல் ஆமதாபாத்தில் சில பொது வசதிகளைப் பயன்படுத்த முடியாது. குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். மாநகராட்சியின் கீழ் உள்ள பொதுப்போக்குவரத்துகள், பொது கட்டிடங்கள், அரசு சார்ந்த பொது இடங்களில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கன்காரியா ஏரி முகப்பு, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் அனுமதியில்லை என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பராமரிப்பில் உள்ள பூங்காக்களின் இயக்குநர் ஜிக்னேஷ் படேல் கூறியதாவது:-
கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி. தடுப்பூசி போடப்படாதவர்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படும். முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசிக்காக காத்திருந்தாலும் அவர்கள் போக்குவரத்து சேவை மற்றும் கட்டிடங்களில் நுழைய அனுமதியில்லை' என கூறினார். மாநகராட்சியின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.