புதிய தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஞானேஷ்குமார்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் ஞானேஷ்குமார் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய தலைமை ஆணையராக ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோவில் தொடர்பான சுப்ரீம்கோர்ட்டு வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

61 வயதான ஞானேஷ்குமார், ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்தை பெற்றிருக்கிறார். 1988ம் ஆண்டு கேரளா ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்தவராவார். சமீபத்தில் இவர் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் (காஷ்மீர் பிரிவு) பதவியை வகித்திருந்தார். அமிதஷாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், அமித்ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்திருக்கிறார்.

தவிர, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்கிறார். கல்வியை பொறுத்த அளவில், கான்பூரில் உள்ள இந்திய பொறியியல் நிறுவனத்தில் சிவில் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி படிப்படையும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் ஆகியவற்றையும் பயின்றிருக்கிறார்.

இதனிடையே அவரது நியமனத்தால் காலியாகும் தேர்தல் ஆணையர் பணிக்கு விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். 1989-ம் ஆண்டின் அரியானா பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜோஷி, 2031-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருப்பார்.

இந்நிலையில் நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். 65 வயது பூர்த்தி ஆகும் வரை, தேர்தல் ஆணையத்தில் பணியாற்றலாம். எனவே, 2029-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வரை அவர் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பார்.

அவரது பதவிக்காலத்தில், இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்த ஆண்டு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. 2027-ம் ஆண்டு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களையும் நடத்துவார். 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் ஓய்வு பெறுவார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com