

டிஜிட்டல் மயம்
மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று மும்பை ஹஜ் ஹவுசில், ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வசதியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக 2019-ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டில் ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்கவில்லை. 2022-ம் ஆண்டு ஹஜ் பயணம் குறித்து ஆலோசனைக்கு பிறகு அறிவிப்புகள் வெளியிடப்படும். இதேபோல 2022-ம் ஆண்டு ஹஜ் பயணம் குறித்து டெல்லியில் நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் சிறுபான்மை விவகாரத்துறை அதிகாரிகள், வெளியுறவு துறை, சுகாதாரம், விமானப்போக்குவரத்து அதிகாரிகள், சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர், ஜெட்டாவில் உள்ள இந்தியாவுக்கான கவுன்சில் ஜெனரல் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். அடுத்த ஆண்டு (2022) முதல் ஹஜ் பயண நடைமுறைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
மெஹ்ராம் இன்றி பெண்கள்
2021-ல் 700 பெண்கள் மெஹ்ராம் (ஆண் துணை) இன்றி பயணம் செய்ய விண்ணப்பித்து இருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டில் 2 ஆயிரத்து 100 பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அடுத்த ஆண்டு பயணம் செய்யலாம். அடுத்த ஆண்டு மற்ற பெண்களும் மெஹ்ராம் இன்றி செல்ல விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.