

மும்பை,
தங்கள் மகள் குற்றம் செய்திருந்தால் அவளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என சியா கோயலின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
புனே ககுஞ்சே பகுதியைச்சேர்ந்தவர் இளம் தொழில் அதிபர் கேதன் விஷால் அகர் வால்(வயது 26). இவரது குடும்பத்தினர் ரியல் எஸ்டேட் துறையில் தடம் பதித்து பெரும் பணம் படைத்தவர்களாக விளங்குகின்றனர்.
இவருக்கும், மசாலா மற்றும் முந்திரி வியாபாரம் செய்யும் குடும்பத்தை சேர்ந்த சியா கோயல்(20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற நவம்பர் மாதம் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால், இளம் ஜோடியினர் பல இடங்களுக்கு சென்று வந்தனர்.
இந்தநிலையில் சியா கோயல் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கேதன் விஷாலை புனே அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லோஹாகாட் கோட்டைக்கு கடந்த 18-ந்தேதி அழைத்திருந்தார். அன்று இருவரும் ஜோடியாக மலையேற்றம் சென்றனர்.
மலையில் உள்ள செங்குத்தான பாறையில் புகைப்படம் எடுத்தபோது, கேதன் விஷால் எதிர்பாராதவிதமாக 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டார் என சியா கோயல் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் அழுதுகொண்டே கூறினார். இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று, சுமார் 3 மணிநேரம் போராடி கேதன் விஷாலை சடலமாக மீட்டனர். போலீசார் இதனை விபத்து எனக்கருதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஆனால் கேதன் விஷாலின் குடும்பத்தினருக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி போலீசார் நடத்திய புலன் விசாரணையில் இளம்பெண் சியா கோயல் தனது காதலனுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி, தனக்கு திருமணம் நிச்சயித்த இளம் தொழில் அதிபரை மலையில் இருந்து தள்ளிக்கொன்றது வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இளம்பெண் சியா கோயலையும், அவரது காதலனான பாபுலால் சவுத்ரி(22) என்ற வாலிபரையும் கைது செய்து புனே மாவட்டம் மாவல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வருகிற 29-ந்தேதி வரை அவர்களை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. விசாரணைக்குப்பிறகு அவர்கள் சிறையில் கம்பி எண்ண உள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சியா கோயலின் பெற்றோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “அவள் குற்றம் செய்திருந்தால் அவளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அவள் குற்றவாளி என்றால் அவளை தூக்கில் போடுங்கள். எங்கள் மகளாக இருந்தாலும் சரி, குற்றவாளியாக இருந்தால் தண்டனை கிடைத்தே தீர வேண்டும்” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.