அரியானா: பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் மூளைச்சாவு

அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியானா: பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் மூளைச்சாவு
Published on

குர்கான்,

அரியானா மாநிலத்தின் குர்கானில் கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வரும் கிருஷ்ணகாந்துக்கு, மாநில போலீஸ் துறையில் ஏட்டாக பணியாற்றிய மகிபால் என்பவர் பாதுகாவலராக இருந்து வந்தார்.

கிருஷ்ணகாந்தின் மனைவி ரிது (வயது 45), மகன் துருவ் (18) மற்றும் மகிபால் ஆகியோர் கடந்த 13-ந்தேதி அங்குள்ள ஆர்காடியா மார்க்கெட்டுக்கு சென்றனர். செல்லும் வழியில் ரிதுவுக்கும், மகிபாலுக்கும் இடையே காரில் வைத்து தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகிபால், மார்க்கெட்டில் பொதுமக்கள் முன்னிலையிலேயே ரிது மற்றும் துருவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிருக்கு போராடினர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரிது பரிதாபமாக உயிரிழந்தார். துருவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் இன்று மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மகிபாலை கைது செய்த போலீசார் குர்கான் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com