

பெங்களூரு,
கர்நாடகாவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. அதேபோல், மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளன. இதனால், புதிய ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா யாரை அழைப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்து உள்ளது.
இதற்கிடையில், இன்று பெங்களூருவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.