

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று மத்திய சுகாதாரத்துறை, உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
அதாவது 15 சதவீதத்துக்கும் மேல் பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று கூறினார்கள். எனவே அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் சுகாரத்துறை சிபாரிசு செய்து உள்ளது.
எனினும், இது தொடர்பான இறுதி முடிவை மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே மத்திய அரசு எடுக்கும் என்று கூறப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அவசியமானது எனவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை போன்ற மாவட்டங்களில் 15 சதவீதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால் இந்த பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது.