ஒடிசாவில் வெப்ப அலை; பள்ளி கூடங்களின் பாடவேளை நேரம் மாற்றியமைப்பு

ஒடிசாவில் வெப்ப அலையை முன்னிட்டு பள்ளி கூடங்களின் பாடவேளை நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவில் வெப்ப அலை; பள்ளி கூடங்களின் பாடவேளை நேரம் மாற்றியமைப்பு
Published on

புவனேஸ்வர்,

இந்தியாவில் நடப்பு ஆண்டில் கோடை காலத்தில் கடும் வெப்பம் காணப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்ப அலையால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். அனல் காற்றும் வீசி வருகிறது.

ஒடிசாவில் எப்போதும் புயல், கனமழை காலங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட கூடிய சூழலில், கோடை வெப்பமும் சேர்ந்து தனது உக்கிர நிலையை காட்டி வருகிறது. இதனால், மக்கள் வெப்பம் சார்ந்த தோல் வியாதிகளை எதிர்கொள்வதுடன் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26ந்தேதி முதல் 30ந்தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி கூடங்களையும் மூடும்படி அறிவிப்பு ஒன்றில் ஒடிசா அரசு உத்தரவிட்டு இருந்தது. எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறுவதில் எந்த தடையும் இருக்காது என்றும் இதுபற்றிய அறிவிப்பில் அரசு தெரிவித்தது.

இதேபோன்று, ஒடிசாவில் ஏற்பட்டு உள்ள வெப்ப அலையை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 27ந்தேதி முதல் மே 2ந்தேதி வரை (இன்று) 6 நாட்களுக்கு உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து உயர்நிலை கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒடிசாவில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் வேளைகளில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அனல்காற்றும் வீசி வருகிறது.

ஒடிசா முழுவதும் காணப்படும் தீவிர வெப்ப அலையை முன்னிட்டு மாணவ மாணவியர்களின் சுகாதார நலன்களுக்காக பள்ளி கூடங்களின் பாடவேளை நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரையே பள்ளி கூடங்கள் செயல்படும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com