அசாமில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

அசாம் தவிர, நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களும் தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

அசாமில் கனமழை, வெள்ளம்:  பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
Published on

கவுகாத்தி

அசாமில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது.

அசாமில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அசாம் தவிர, நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களும் தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பிரம்மபுத்திரா ஆறு மற்றும் அதன் கிளை கால்வாய்களில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

நீரோட்டம் அதிகரிப்பு

சராய்தியோ மாவட்டத்தில் உள்ள தேசங்பானி பகுதியில் அமைந்த தேசங் ஆற்றில், தொடர்ந்து நீரோட்டம் அதிகரித்து வெள்ள அபாய சூழல் காணப்படுகிறது.

திப்ரூகார் மாவட்டத்தில் உள்ள செனிமரி பகுதியில் உள்ள புரிதெஹிங் ஆற்றிலும் நீர்மட்டம் 102.66 மீட்டர் என்ற அளவில் காணப்படுவதுடன், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தும் காணப்படுகிறது. அதனுடன், கவுரங், திகோவ், தன்சிரி உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள அபாய சூழல் உள்ளது.

பலி எண்ணிக்கை உயர்வு

இந்த சூழலில், அசாமில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது.

16 மாவட்டங்களில் உள்ள 45 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 794 கிராமங்களை சேர்ந்த 3.62 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

விவசாய நிலங்கள்

இவற்றில் சிவசாகர், சராய்தியோ, ஜோர்ஹாட், திப்ரூகார், சோனித்பூர், பிஸ்வநாத், கோலாகாட், தேமாஜி, டின்சுகியா, நகாவன், கர்பி ஆங்லாங், கச்சார், உதல்குரி, சிராங், காம்ரூப் மற்றும் காம்ரூப் (மெட்ரோ) ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதுடன், விவசாய நிலங்களும் பெரிய அளவில் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், மீட்பு மற்றும் நிவாரண பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் தொடர்ச்சியாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com