

இடுக்கி
கேரளாவில் கனமழையால் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.
இதில் இடுக்கி மாவட்டத்தின் அடூர் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடு ஒன்று மண்ணில் அடியோடு புதைந்தது. அந்த வீட்டில் வசித்த சுமதி என்பவர் நிலச்சரிவில் சிக்கி பலியானார்.
அவருடைய கணவர் ரவி மற்றும் மகன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தொடுபுழாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதேபோன்று வாகமண் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, வீடு மண்ணில் புதைந்ததில், வைக்கம் பகுதியை சேர்ந்தவரான பிரபாகரன் நாயர் என்பவர் பலியானார். தவிர மற்றொருவர் நிலச்சரிவில் பலியானார்.
இந்த தகவல் அறிந்து அரக்கோணத்தில் இருந்து இடுக்கிக்கு, பேரிடர் மீட்புக்குழு சென்றுள்ளது. பலத்த மழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாவாசிகள் யாரும் ஆபத்து நிறைந்த மலை பகுதிகளுக்கோ அல்லது கடலோர பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கோட்டயத்தில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இதனால், பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. வாகமண், ஏலப்பாறையில் வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. பம்பை, கக்கட்டார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால், பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் அவதியடைந்து உள்ளனர். ஆறுகளில் வெள்ள நீர் உயர்ந்து வரும் சூழலில், வீடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.