பீகாரில் கனமழை: சட்டசபை, மந்திரிகளின் பங்களாக்களை சூழ்ந்த வெள்ள நீர்

பீகாரில் பருவமழை பாதிப்பை அடுத்து, செப்டம்பர் 30-ந்தேதி வரை மூத்த அதிகாரிகள் யாருக்கும் விடுமுறை கிடையாது என நகர வளர்ச்சி துறை மந்திரி நிதின் கூறியுள்ளார்.
பீகாரில் கனமழை: சட்டசபை, மந்திரிகளின் பங்களாக்களை சூழ்ந்த வெள்ள நீர்
Published on

பாட்னா,

பீகாரில் பருவமழையை முன்னிட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள், சட்டசபை மற்றும் அதில் இருந்து சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மந்திரிகளின் பங்களாக்கள் மற்றும் பல்வேறு மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பாட்னா நகரில் 41.8 மி.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ட்ராண்ட் சாலை, ராஜ்பன்சி நகர், போரிங் சாலை, பெய்லி சாலை மற்றும் பாடலிபுத்ரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்-மந்திரி நிதிஷ் குமார் வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோன்று, செப்டம்பர் 30-ந்தேதி வரை மூத்த அதிகாரிகள் யாருக்கும் விடுமுறை கிடையாது என்றும் விடுமுறையில் உள்ளவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் என நகர வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை மந்திரி நிதின் நபின் கூறியுள்ளார்.

எனினும், எச்சரிக்கை விடும் அளவுக்கு நிலைமை மோசமடையவில்லை என நீர்வள துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com