கனமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுச்சேரி,

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்ததால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது. மழையின் தாக்கமும் குறைந்தது. இந்த சூழலில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வந்தது.

இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி (நாளை மறுதினம்) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கரையோரமாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில்புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு உருவானால் அதற்கு 'பெங்கல்' என்ற பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. பெங்கல் புயல் உருவாகி வட தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் கனமழை எதிரொலியாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com