

புதுடெல்லி,
இந்தியாவில் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வரும் மக்கள் துயருற்று வருகின்றனர். நாட்டில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றைய நிலவரப்படி வெளியிட்டு உள்ள செய்தியில், பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசத்தின் வடமேற்கு பகுதிகள், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவும், தலைநகர் டெல்லி, மேற்கு வங்காளத்தின் இமயமலை அடிவார பகுதிகள், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய 4 மாநிலங்களிலும், சண்டிகரிலும் குறிப்பிட்ட பல பகுதிகளில் மித அளவிலான பனிப்பொழிவும் பதிவாகி உள்ளது என்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 5.30 மணிவரையில், பஞ்சாப், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளத்தின் இமயமலை அடிவார பகுதிகள் மற்றும் சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களில் அடர் மற்றும் அதிக அடர்பனி படர்ந்துள்ளது பதிவாகி உள்ளது.
இதேபோன்று, மத்திய பிரதேசத்தின் வடமேற்கு பகுதிகள், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவின் உள்பகுதிகளில் சில இடங்களில் மித அளவிலான பனிபடர்ந்து காணப்படுகிறது என தெரிவித்து உள்ளது.