

திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாதத்துடன் தந்திரி மகேஷ் மோகனரு பணிக்காலம் முடிவுக்கு வருகிறது. அவருக்கு பிறகு கண்டரரு ராஜீவரரு தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தங்கம் கொள்ளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் இருக்கிறார்.
எனவே அவரை மீண்டும் தந்திரியாக நியமிப்பதில் சட்ட சிக்கல் உள்ளது. மேலும் அவருடைய மகன் கண்டரரு பிரம்மதத்தனை நியமிக்கலாமா? என்ற ரீதியில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் புதிய தந்திரியை ஐகோர்ட்டே முடிவு செய்யும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தான மந்திரி கே.முரளீதரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-
புதிய தந்திரி நியமனம் தொடர்பாக, தீர்மானிக்கும் முடிவை கேரள ஐகோர்ட்டு எடுக்க தேவஸ்தான வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. சபரிமலை தங்கம் கடத்தல் விவகாரம் கேரளம் ஐகோர்ட்டின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதனால் அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் தலையிட முடியாது.
சபரிமலை கோவில் விவகாரத்தில் ஐகோர்ட்டின் எல்லை மீறிய தலையீடு இருக்கிறது. பூஜைக்கு பூ வாங்க வேண்டுமானாலும், என்ன பூ வாங்க வேண்டும் என ஐகோர்ட்டின் அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது.
பல தலைமுறை கடந்தாலும் தங்கம் கொள்ளை வழக்கு முடிவுக்கு வராது. சபரிமலையின் நிர்வாகம் அல்லது வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விஷயங்களில் மாநில அரசோ அல்லது திருவிதாங்கூர் தேவஸ்தானமோ தற்போது தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாத அளவிற்கு கோர்ட்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.