

புதுடெல்லி,
அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.
அப்போது ஏற்கனவே தகுதி உள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசை பொறுத்தவரை சிறு, குறு விவசாயிகளுக்கும், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் இடையே ஒரு வரையறையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது. எனவே அனைத்து விவசாயிகளுக்குமான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை ஏற்க வேண்டியதில்லை எனவும் இந்த மனுவை முடித்து வைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிறு, குறு விவசாயிகளுக்கும், பெரிய விவசாயிகளுக்கும் இடையே ஒரு கோடு உள்ளது நல்லது என்று தெரிவித்த நீதிபதிகள் தமிழகத்தில் பயிர்க்கடன் பெற்ற 5 ஏக்கருக்கும் மேல் நிலம் விவசாய வைத்துள்ள விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.