'காந்தாரா' திரைப்படம் குறித்து சர்ச்சை கருத்து: நடிகர் சேத்தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

‘காந்தாரா’ திரைப்படம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் சேத்தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுத்துள்ளது.
'காந்தாரா' திரைப்படம் குறித்து சர்ச்சை கருத்து: நடிகர் சேத்தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
Published on

பெங்களூரு:

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கி உள்ள காந்தாரா திரைப்படம் குறித்து நடிகர் சேத்தன் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். அவருக்கு ரிஷப் ஷெட்டி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்து கடவுளை அவமதிப்பு செய்ததாக சேத்தன் மீது சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் சேத்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சேத்தன் கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.அருண் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் தனது மனுதாரர் கூறிய கருத்தால் சமூகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அவர் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்கவில்லை என்று கூறினார். அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மனுதாரர் வேண்டும் என்றே சர்ச்சை கருத்துகளை கூறியதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் மனுதாரர் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com