வளர்ந்த பாரதம் இலக்குக்கான வங்கி சீர்திருத்தங்களுக்காக.. விரைவில் உயர்மட்டக்குழு - நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கமும், வங்கித் துறையும் தயாராக இருப்பதாக நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
வளர்ந்த பாரதம் இலக்குக்கான வங்கி சீர்திருத்தங்களுக்காக.. விரைவில் உயர்மட்டக்குழு - நிர்மலா சீதாராமன் தகவல்
Published on

புதுடெல்லி,

வளர்ந்த பாரதம் இலக்கு நோக்கிய பயணத்தின் முதல்படியாக வங்கி சீர்திருத்தங்களுக்காக விரைவில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

2 நாள் மாநாடு

2026-ம் ஆண்டுக்கான பொதுத்துறை வங்கிகளின் 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. மாநாட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். முக்கிய முன்னுரிமைகள், உருவாகி வரும் புதிய வாய்ப்புகள் மற்றும் வங்கி, நிதித்துறையின் மாறி வரும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக, இந்த மாநாடு பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொது நிதி நிறுவனங்களின் தலைவர்களை ஒன்றிணைத்து உள்ளது.

7 கருப்பொருட்கள்

தொடக்கவிழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், "நாம் 2026-ல் இருக்கிறோம். வளர்ந்த பாரத் இலக்கை அடைய நமக்கு குறைவான காலமே, அதாவது 20 ஆண்டுகளே இருக்கிறது. எனவே வளர்ந்த பாரதத்துக்காக வங்கித்துறை பற்றி பேசுவதற்கு இதைவிட சிறந்த தருணம் இருக்க முடியாது.

இளைஞர்களுக் கான வங்கி சேவை, முதலீட்டு சுழற்சிக்கு ஆதரவு அளித்தல், உலகளாவிய திறன் மையங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மதிப்புச் சங்கிலி உட்கட்டமைப்பு, முன்னுரிமை துறைக்கான கடன் வழங்கல், மற்றும் கடன் அட்டை வணிகத்தை மறு வடிவமைத்தல் உள்ளிட்ட 7 கருப்பொருட்களில் நிதிச்சேவை துறை பணியாற்றியதற்கு பாராட்டுகள்" என்று கூறினார்.

உயர்மட்டக்குழு

மேலும் வளர்ந்த பாரத் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காக, வங்கித்துறை தொடர்பான உயர்மட்டக்குழு ஒன்றை அரசு விரைவில் அமைக்கும் என்றும், இக்குழு பிரச்சினைகளையும், பரிந்துரைகளையும் பரிசீலித்து, வங்கி சீர்திருத்தங்களின் எதிர்காலப் போக்கை முடிவு செய்யும் என்றும் கூறினார்.

இதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு வங்கியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். வங்கிகளின் எதிர்காலப்பங்கு குறித்த தனது பரிந்துரைகளை குழு வகுக்கும்போது, இந்த கலந்துரையாடல்களின் முடிவுகள் மதிப்புமிக்க, சாராம்சமான உள்ளீடுகளை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

அரசு தயார்

இந்திய வங்கிகள் வலுவான நிலையில் இருப்பதாகவும், வராக்கடன்கள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த மட்டத்தில் இருப்பதால், இது சீர்திருத்தங்களுக்கு வலுவான அடித்தளத்தை வழங்கும் என்றும் கூறினார்.

உயர்மட்டக்குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தவுடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கமும், வங்கித் துறையும் தயாராக இருக்கும் என்று நிதி மந்திரி நம்பிக்கை தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com