

புதுச்சேரி,
புதுச்சேரியில் மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள ஜிப்மர் மருத்துமனை மற்றும் மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. மருத்துவமனையில் அலுவல் ரிதியான பயன்பாட்டிற்கு ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே அலுவல் ரீதியான பணிகளுக்கு முடிந்த வரை இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவை பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஜிப்மர் இயக்குநரின் உத்தரவுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஜிப்மர் மருத்துவமனை முன்பு இன்று கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.