

புதுடெல்லி,
இந்தியாவில் எழுத்துலகில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு, கடந்த 1961 முதல் ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஞானபீட விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு பிரபல இந்தி எழுத்தாளர் கிருஷ்ணா சோப்தி செய்யப்பட்டு உள்ளார்.
டெல்லியில் கூடிய ஞானபீட விருதுக்குழு, 53வது ஞானபீட விருதுக்காக கிருஷ்ணா சோப்தியை தேர்வு செய்தது.
தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட குஜராத்தில் பிறந்த கிருஷ்ணா சோப்தி, சிறந்த நாவலாசிரியராகவும், கட்டுரையாளராகவும் விளங்கியவர்.
இவர் எழுதிய பல புத்தகங்கள் பிற இந்திய மொழிகள், ஆங்கிலம், ரஷிய, சுவீடன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. இவர் எழுதிய ஜிந்தகிநாமா நாவல் கடந்த 1980ல் சாகித்ய அகாடமி விருதை அவருக்கு வென்று கொடுத்தது. மேலும் தனது சிறப்பு மிக்க எழுத்தாற்றலால் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்று உள்ளார். இந்திய அரசால் 2010-ம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.