வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை வழங்கிய வரலாற்று தீர்ப்பு; இந்து மகாசபை வழக்கறிஞர் பேட்டி

வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை வழங்கிய வரலாற்று தீர்ப்பு என இந்து மகாசபை வழக்கறிஞர் பேட்டியில் கூறியுள்ளார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை வழங்கிய வரலாற்று தீர்ப்பு; இந்து மகாசபை வழக்கறிஞர் பேட்டி
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பினை வாசித்தது. இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.

இந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து அலகாபாத் நீதிமன்றம் வழங்கியது தவறு. கடந்த 1857ம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லிம் அமைப்புகள் தவறி விட்டன. அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்கவும் நீதிபதிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

தீர்ப்பு வெளியான நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வளாக பகுதிகளில் வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களை எழுப்பினர். அவர்களை தடுத்து நிறுத்தும்படி பிற வழக்கறிஞர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர். தீர்ப்பு வெளியான நிலையில் இந்து மகாசபையின் வழக்கறிஞரான விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்பொழுது, அயோத்தியில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் உரிய இடத்தில் வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

இதேபோன்று, இந்து மகாசபை வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இது சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று தீர்ப்பு. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது என கூறினார்.

இந்த தீர்ப்பு வெளியான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர், யாரும் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். நீதிபதிகள் கூறியவற்றை எதனையும் நாங்கள் மறுக்கவில்லை. எனினும் இந்த தீர்ப்பில் எங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. தீர்ப்பின் முழு விவரம் வந்தபின்பு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com