

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே புதிய பொருளாதாரப் பாலத்தை அமைக்கும் வகையில் இது இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 8,284 பொருட்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும். நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் கம்பளி, மரம், நிலக்கரி மற்றும் பழங்கள் மீதான வரிகள் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
“இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பயணத்தில் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் இது. சிறந்த வணிகங்களுக்கும், பெரிய முதலீடுகளுக்கான வாய்ப்பு உருவாகிறது. கடந்த 3½ ஆண்டுகளில் 9 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளோம்” என்றார்