ராட்டினத்தில் தலைமுடி சிக்கி உச்சந்தலையின் தோல் முழுவதுமாக பிய்ந்து வந்த கொடூரம் - இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

ராட்டினம் சுழன்ற வேகத்தில் பெண்ணின் தலைமுடி இழுக்கப்பட்டு, உச்சந்தலையின் தோல் முழுவதுமாக பிய்ந்து வந்துவிட்டது.
ராட்டினத்தில் தலைமுடி சிக்கி உச்சந்தலையின் தோல் முழுவதுமாக பிய்ந்து வந்த கொடூரம் - இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டதில் உள்ள புனேஷ்வர் கோவில் அருகே ‘தன்ஹா போலா’ திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட பொருட்காட்சியில் ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த பொருட்காட்சிக்கு நேற்று முன்தினம் புல்சவாங்கி பகுதியை சேர்ந்த பாலி மரோட்டி என்ற 25 வயது பெண் சென்றிருந்தார்.

அவர் அங்கு கைகளால் இயக்கப்படும் ‘ஜெயண்ட் வீல்’ ராட்டினம் ஒன்றில் ஏறி அமர்ந்தார். இந்நிலையில், ராட்டினம் சுற்ற ஆரம்பித்த சில வினாடிகளில் இளம்பெண் பாலி மரோட்டியின் தலைமுடி ராட்டினத்தின் சுழலும் பேரிங்கில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் வலியில் கத்தி கூச்சலிட்டார்.

ஆனால் ராட்டினம் வேகமாக சுற்றத் தொடங்கிவிட்டதால், உடனடியாக அதை நிறுத்த முடியவில்லை. ராட்டினம் சுழன்ற வேகத்தில் அந்த பெண்ணின் தலைமுடி இழுக்கப்பட்டு, உச்சந்தலையின் தோல் முழுவதுமாக பிய்ந்து வந்துவிட்டது. இதைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் ஒருவழியாக ராட்டினம் நிறுத்தப்பட்டு பாலி மரோட்டி கீழே இறக்கப்பட்டார். அவரது தலையில் தோல் பிய்ந்து பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் பாலி மரோட்டி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், இந்தியாவில் இதுபோன்ற பொருட்காட்சிகளில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக பின்பற்றப்படுவதே இல்லை என பலர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராட்டினத்தில் ஏறும்போது தளர்வான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் எனவும், பெண்கள் தங்களது தலைமுடி, துப்பட்டா போன்றவற்றை கவனமாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com