பீகாரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுமி எரித்துக் கொலை; 4 பேர் மீது வழக்கு

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுமி எரித்துக் கொலை; 4 பேர் மீது வழக்கு
Published on

பாட்னா

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர் தினசரி கூலிக்கு பஞ்சாப் மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்தார். ஜனவரி 3 ஆம் தேதி இவர் வீட்டிலில்லாத நேரத்தில், வீட்டுக்குள் புகுந்த 4 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், தடயங்களை அழிப்பதற்காக அவரை அறைக்குள்ளேயே வைத்து தீயிட்டுக் கொளுத்தியதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சிறுமியின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நான் பஞ்சாபில் தினசரி கூலிக்கு வேலை செய்துவந்தேன். எனது இளைய மகளுக்கு நடந்த கொடூரத்தை நேரில் பார்த்த என் மூத்த மகள் என்னை அழைத்து நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியதைக் கேட்டு இங்கு வந்தேன். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டிற்குள் புகுந்து என்னுடைய 12 வயது மகளை மாறி மாறி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். பிறகு தடயங்களை அழிக்க அவள் இருந்த அறையிலேயே அவளை தீவைத்துக் கொளுத்தி சாம்பலாக்கியுள்ளனர் என்று கூறி உள்ளார்.

மேலும் அந்தப் புகாரில், இதற்கு முன்பே கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களுடன் வருமாறு வற்புறுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான நான்கு பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com